புதன், 21 டிசம்பர், 2016

"அலைமுறியும் கடற்காற்றில்"



நான் கவிதைகளை எழுத ஆரம்பித்த காலங்களில் எனக்கு முந்தைய தலைமுறையில் எழுதியவர்களில் நட்சத்திரன் செவ்விந்தியனை மட்டும் தான் முக்கியமானவராக கருதினேன், இன்றும் அப்படித் தான் . சேரன்,வ .ஐ. ச  ஜெயபாலன் , ஊர்வசி, சிவரமணி எல்லாம் ஏதோவொரு புள்ளியில் வேறு விதமான அனுபவங்களைத் தருபவர்களாக இருந்தார்கள்.

நட்சத்திரன் செவ்விந்தியன்  


செவ்விந்தியனின் "வசந்தம் 91" தமிழில் வந்த முதல் தொகுப்புகளில் முக்கியமானதொன்று. அதன் மொழியமைப்பு மிகவும் சரளமான , நதியின் மேல் எறியும் கல்லைப் போன்று தாவிச் சென்று மறைவது.

*

ரமணன் அண்ணாவின் வீடு தான் எனக்கு ஏராளம் புத்தகங்களைக் காட்டித் தந்த வீடு . குறைந்தது ஆயிரம் புத்தகங்கள் ,ஆயிரமும் தேர்ந்தெடுத்த புத்தகங்கள் , கவிதைகள் , சிறுகதைகள் , நாவல்கள் , கட்டுரைகள் , தத்துவ நூல்கள் , பழைய இலக்கிய சஞ்சிகைகள் . இவ்வளவுக்கும் மேல் அவரது மரபும் நவீனமும் பற்றிய அறிவு.இரவும் பகலும்  உரையாடிக் கொண்டே இருப்போம்.

சிறிய வயதில் (ஒரு பன்னிரண்டு வயது இருக்கலாம் ) அவருடைய புத்தகங்களை அடுக்கிக் கொடுக்கும் வேலைகளை நானும் எனது சகோதரர்களும் ஊர்ப் பெடியளும் செய்வோம் , அவர் வீட்டில் மீன்கள் வளர்த்தார். ரெஸ்லிங்க் பார்ப்போம். பாதி பொழுது போக்கு நேரம் அங்கேயே. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விருப்பமிருக்கும். ரெஸ்லிங்க் பார்க்க ஒரு கூட்டம் வரும் , மீன் பார்க்க இன்னொன்று . நான் மூன்று இடங்களிலும் நின்றேன். புத்தகங்களை அடுக்கிக் கொடுத்தால் சில சஞ்சிகைகளை , இரண்டுக்கு மேலிருக்கும் சில புத்தகங்களை அவர் எங்களுக்குத் தருவார். அவற்றைச்  சேர்த்தும் அங்கே இங்கே பொறுக்கியும் , நானும் ஒரு நூலகம் எனது வீட்டில் நடத்தினேன். புத்தகங்களை ஒரு பழைய கபேர்ட்டில் வைத்து புத்தகங்களை எடுத்து வாசிப்பவர்களின் பெயரை ஒரு கொப்பியில் எழுதி வைப்பேன்  . சில மாதங்கள் அந்த  நூலகம் நன்றாக ஓடியது என்று ஞாபகமிருக்கிறது.

பின்னர் பதின்னாலு வயதில் அவர் எனக்கு வாசிக்கத் தந்த புத்தகமொன்றைத் தொலைத்து விட்டேன் . அவர் என்னை கோபத்துடன்  பேசியதுடன்  நான்கு வருடங்கள் வேறு  புத்தகங்கள் தரவேயில்லை. அதன் பிறகு தான் நான் நூலகங்களுக்குச் சென்று புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தேன்.

நான் புத்தகத்தை தொலைத்தது சண்டைக் காலமென்பதால் அதனை மீளவும் வாங்க முடியாது ,அது போக ஏற்கனவே அவருக்கு குடும்ப கஷ்டமும் இருந்த காலம் . அதனால் தான் தான் அவர்  கோபமாக இருந்தார், பின் அது சரியாகி விட்டது.நான்கு வருடங்களின் பின், நான் இலக்கியத்தில் இவ்வளவு ஆர்வமாயிருக்கிறேன் என்பதை அறிந்து அவர் மீண்டும் எனக்கு புத்தகங்களைத் தந்தார். அது ஒரு நீண்ட இடைவெளியில் நான் கண்டபடி வாசித்துத் தள்ளிய ஆயிரக்கணக்கான புத்தகங்களை ஒழுங்கு படுத்தும் செயலாக இருந்தது. அதற்குப் பிறகு தான் ஒரு நாள் , இது தான் நட்சத்திரன் செவ்விந்தியனின் தொகுப்பு முக்கியமானதொன்று என்று எனக்குத் தந்தார்.

*

எனக்கு பதினெட்டு வயதிருக்கும் போது வீட்டில் ஒழுங்காக சாப்பாடு இருக்காது. அம்மா இல்லையென்பதால் அங்கே இங்கே என்று அலைந்து விட்டு வீட்டுக்கு வருவேன். இரவு பத்து மணிக்குத் தான் வேலை முடித்து  அப்பா இரவுச் சாப்பாடு கொண்டு வருவார். அது வரை பசி வயிற்றைக் கிள்ள புத்தகங்களை வாசித்துக் கொண்டிருப்பேன். அம்மாவின் மரணத்தின் பின் நாங்கள் ரீவி பார்ப்பது குறைவு, எனக்கு மிகவும் சலிப்பூட்டும் செயல். நான் ,தம்பி , தங்கச்சி மூன்று பேரும் கதைத்துக் கொண்டிருப்போம். எப்பொழுதும் எதையாவது நக்கலடித்துக் கொண்டும் சிரித்துக் கொண்டிருக்கவும் நாங்கள் பழகிக் கொண்டோம்.எனது தங்கச்சியின் கதைகளைக் கேட்டால் "பூஷ்கின் நகரத்தில் பிறந்த குறும்புக்காரியே" என்ற அக்மத்தோவாவின் வரி தான் ஞாபகத்திற்கு வரும் . அப்படித் தான் நாங்கள் வளர்ந்தவர்களாயினோம்.

அப்பா வரும் வரை நாவல்கள் படித்துக் கொண்டிருப்பேன் . அநேகம் ரஷ்ய நாவல்கள் தான். நட் ஹம்சனின் " பசி " நாவல் எனக்குப் பிடித்தமான ஒன்று. மூண்டு நான்கு பக்கத்திற்கு ஒரு தடவையாவது பசி என்ற சொல்லோ  உணர்வோ கசிந்து கொண்டேயிருக்கும். எனக்கும் பசி வயிற்றைக் கிள்ளிக் கொண்டிருக்கும்.

இன்னொரு புத்தகம்  சேகுவாராவின் "மோட்டார் சைக்கிள் டயரிக் குறிப்புகள்" எல்லோரும் ஒரு விடுதலை வீரரின் புத்தகமாக அதை படித்துக் கொண்டிருக்க சேகுவேராவும் அவரது நண்பரும் சாப்பாட்டிற்காக பொய் சொல்லி என்னென்ன வகையான பொய்கள்  சொன்னார்கள் என்று நினைத்துச் சிரித்துக்கொண்டிருந்தேன்.

செவ்விந்தியனின் இந்த வரிகளை நான் இப்படியான காலத்தில் தான் வாசித்தேன்.

...
நான் இறந்திருந்த நாட்களில்
மப்புக்கொட்டி துக்கும் சொரிந்தது எனக்காக
மழை தகரத்தில் அடித்துக்கொண்டு பெய்து
என் அறையில் சில புத்தகங்களையும் நனைத்து
நிலம் முழுவதும் தண்ணி கசிந்தும் ஓடியது.

சோவியத் ருஷ்ய
நாவல்களைப் படித்துக் கொண்டிருப்பேன்
மரணத்துக்குப் போகும்வழியில்
நித்திரை கொள்ள வைக்கும்
நேரகாலம்
சும்மா போனது துளிர்த்து வருத்தும்
இரவுகளில் வாய்திறந்து ஒரு வார்த்தையேனும் கூடபேச
சோம்பலுற்றுக் கிடந்தேன்
எல்லாம் ஆகிவிட்டது இனி என்ன
என்வாய் முணுமுணுக்கிறது.
.....
(உயிர்த்தெழுதல்)

 செவ்விந்தியனின் கவிதைகளின் இயல்பான விட்டேற்றித் தனமும் அன்றாட அற்புத வாழ்வை இழக்கும் துயரும் அது கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வரும் பருவங்களை பற்றிய நினைவும்  எனக்கு ஒரு கால கட்ட நான் வாழும் மண்ணின் ஞாபகங்களை தருவதாக இருந்தது. மிக நுட்பமான புற வாழ்வின் சித்திரம் அவரது எல்லாக் கவிதைகளிலும் இருந்தது.

எளிமையான எதிர்ப்பு அது. யுத்தம் எனது வாழ்வை குலைத்துக் கொண்டிருப்பதின் கோபம் அது.

நண்பர்களை இழத்தல், வாழ்வை இழத்தல், வாழ்வின் கொண்டாட்டங்களை அனுபவிக்க முடியாமல் போதலைப் பற்றியே தொடர்ந்து பேசும் இக் கவிதைகள் விவரிக்க முடியாத சோகத்தை எனக்குள் ஏற்படுத்தின. நான் கவிதைகளுக்குள்ளாலேயே யுத்தத்தின் வரலாற்றை விளங்கி கொண்டவன். எனக்கு ஒரு வரலாற்றாசிரியரின் குரலை விட கவிஞரின் குரலில் அதிகம் உண்மையிருப்பதாய்ப் பட்டது.

பளீரிடும் படிமங்களாலும் சொற்களின் நுட்பமான ஒழுங்கு படுத்துதலாலும் சிறிய கதைகளுக்குரிய சம்பவச் சோகங்களை, உரையாடலை  கவிதைப் பிரதியின் உள்ளே நிகழ்த்துவதாலும் இந்தக் கவிதைகளை நெஞ்சுக்கு நெருக்கமான ஒரு சிநேகிதனின் குரலைப் போல என்னால் உணர முடிந்தது.

"பகலில்,
ஒரு பீடி இழுக்கிறதைப் போல
எல்லாம் செய்யலாம் போலுள்ளது"

......

"நடந்து வருகிற கிழவன்
'கொப்பவைப் போல'
'கனகாலத்துக்குப் பிறகு'
சொல்லிக்கொண்டு போகிறான்
பாதையை மறித்துக்கொண்டு நிற்கும்
ஒரு ஊர்மாடு
உதிரி உதிரியாய்
பெருமணல் முற்றத்தில் வீடுகள்"

....

இன்னும் , இது எனக்கு மிகப் பிடித்த கவிதைகளில் ஒன்று ,

Nostalgia

ஒரு மாரிப்பனிக்கால
விடியலில் நான் எழும்புகிறேன்
அப்படியொரு, யாழ்ப்பாணத்தில் படுத்த நினைவு
முருங்கைமர இலைகளும் பூக்களும்
கிளைகளுக்குத் தாவுகிற அணில்களும்
புல் நுனிகளில் பனித்துளி
நான் இரைச்சல் சத்தம்வர புல்லில் சலம் அடித்தேன்.

ச்சா ச்சா ச்தோ
அது என்ன காலமப்பா
வீடுமுழுக்க பூவரசமரம் நிற்கிறது
எங்கள் வீட்டுப் பின்பக்கத்துக் குளம்
இப்போது அது ஒரு நதி
செத்துப்போன அப்பா. வெளிநாடுகளில் இருக்கிற மாமாக்கள்
எல்லாம் நதியில் ஒருக்கா படகோட்டிவிட்டு
வந்து இறங்குகிறார்கள்
நதியோரம் நமது வீடு
படகுகூட ஒரு பூவரசில் கட்டி வருகிறார்கள்
வெய்யில் ஏறுகிறது; அவர்கள் தங்களுக்குள்
கனக்கக் கதைத்து கள்ளுக் குடித்தார்கள்

பறந்துவிட்ட வசந்த காலங்கள்
நிலாமுன்றில் கால்கழுவி
ஒழுங்கையால் போன சைக்கிளையும் மனிதனையும் பார்த்து
பனங்காய் விழுகிற சத்தம் கேட்டு
துயிலுக்குப் போனோம்

- 1993

இந்த நினைவுகளின் அடுக்குகளை நான் மெல்லியதாக உணர முடிகிறது, எங்களது வீட்டின் முன்னால் ஒரு கிரவுண்ட் உண்டு அங்கே தான் கிரிக்கெட்  முதல் பட்டம் வரை விளையாடினோம், பொன்வண்டு முதல் மின்மினிப் பூச்சிகள் வரை அங்கே தான் அறிமுகமாயின. காலையிலும் மாலையிலும் வயலில் புல்லு வெட்டி தலையில் சுமந்து செல்லும் அந்த வயதான பெண்களை நினைத்துப் பார்க்கிறேன், பனி நிறைந்த யாழ்ப்பாணத்தின் பெப்பிரவரி காலைகளில் மாடுகளுடன் நடந்து செல்லும் மனிதர்களின் ஓசையை உணர முடிகிறது. அவர்கள் இந்தக் கவிதைக்குள்  விடுபட்ட சொற்களாயிருக்கிறார்கள்.

இறுதிக்கு கட்ட யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில் 2008 பகுதியில் அல்லது அதற்கு முன்னர் சில மாதங்களின் முன்பிருந்து கேர்பியூ போட்டிருந்தார்கள். நாங்கள் விளையாடிக் கொண்டே இருந்தோம். அப்போது எனக்கு Chees  அறிமுகமாயிருந்தது.

எனது பக்கத்து வீட்டில் சஞ்சி அண்ணையென்று ஒருவர் வந்து செல்வார். அவர்  ஒரு சிறிய இளைஞர் அமைப்பொன்றில் இருந்தார். அது சாரணர் போன்றவொரு அமைப்பு.குறும்பான புன்னகையும் , கீழ்ப் பார்வையில் மற்றவரை எடை போடும் முகமும் அவருக்கிருந்தன. அவருக்கு செஸ் விளையாட ஓரளவு தான் தெரியும் எவ்வளவென்றால் செக் வைத்தாலே செக் மேற் என்று துள்ளியாடுமளவு. அவருக்கு அது மேற் இல்லை என்று சொல்லி விளங்க வைப்பது கடினம். பள்ளிக்கூடத்தில் விளையாடி ஓரளவு நன்றாகவே விளையாட்டாக கூடியவனாக நான்இருந்தேன்.

அநேகமான அந்த கேர்பியூ மாலைகளில் அவருடன் செஸ் விளையாடிக் கொண்டிருப்பேன்,நான் வென்றால்,  நான் அலாப்புவதாக சொல்லி விட்டு எழுந்து சென்று விடுவார். நாங்கள் சின்னப் பெடியள் என்பதால் அவரை நக்கலடித்துக் கொண்டிருப்போம். ஒரு மழை நாள் பின்னேரம் நானும் எனது பக்கத்து வீட்டிலிருந்த ஒரு பெடியனும் செஸ் விளையாடிக் கொண்டிருந்தோம், கிட்டத் தட்ட நான் வெல்லும் நிலைமையில் இருந்த போது தான் சஞ்சி அண்ணையை சுட்டு விட்டார்கள் என்ற தகவல் மழையோடு வந்தது. இரத்தம் தார் வீதியில் வழிய அவர் இறந்து கிடந்தாராம் , யாரோ மழையில் நனையாக் கூடாதென்று தென்னோலை ஒன்றை எடுத்து அவர் மேல் போட்டு விட்டார்களாம்.

இப்படி எத்தனையோ வீதியோர மரணங்களையும் நண்பர்களையும் நான் தொடர்ச்சியாக இழந்திருக்கிறேன். பெரும்பாலானவர்கள் வயதில் பெரியவர்கள் தான். எல்லோரும் விளையாட்டில் கூட்டாளிகள். செவ்விந்தியனின் நண்பர்கள் இயக்கத்துக்குச் செல்வதை பற்றிச் சொல்லும் வரிகளை நான் இப்படிப் பட்ட வாழ்வோடு இணைத்துத் தான் விளங்கி கொண்டேன்.

...
இன்று மீண்டும் புத்துயிர்த்தேன்
கொஞ்ச நேரம்
பின்னேரம் 2 ஆட்டம் Chess விளையாடினேன்
தார்றோட்டும் தெரியாமல்
இருண்ட பிறகு
இயக்கத்துக்குப் போன நண்பர்களைத் தெரிந்து கொண்டு
திரும்பினேன்.
.....
(உயிர்த்தெழுதல்)

.....
பிரிந்து போனவர்கள்

1
நமக்கான காலம்
போய்விட்டதைப்போலுள்ளது
யுத்தம் வந்து
ஊர்களுக்குள் நதிகளையும் சிற்றாறுகளையும் புகவிட்டு
வாரியடித்துக்கொண்டு போயிருக்கிறது.

2
போன ஆண்டிலும் முன்பனிக்காலத்தில்
யுத்தம் வந்து போனது
கடந்த காலத்திற்காக
பத்தாம் வகுப்பு பள்ளிக்கூடத்திற்காக
அறுவடைசெய்த
வயல்வெளிகளுக்காக
அது ஏங்கவைக்கவில்லை.

3
நான்
இனி நெடுகலும் தனித்துத்தான் போனேன்
வயல்காட்டு எல்லைப் பூவரச மரங்களுக்கு
தெரியும்
நிலம் இருண்ட பிறகு
கருங்கல் துருத்தும் தார் றோட்டில்
உழவு முடிந்த கடா மாடுகளைச்
சாய்த்துக் கொண்டு போனான் ஒருதன்
தனித்த பட்டமரத்தில்
அது மேலும் வாழ விரும்பி
இறப்புக்காக முதிய அனுபவங்களுடன் நின்ற
பட்ட மரத்தில்
கொட்டுக்காகம் உச்சிக் கிளையில் வந்திருந்தது
ஒன்றாய்ச் சேர்ந்த துயரங்களுடன்
இயக்கத்துக்குப் போனவர்களில்
ஆனையிறவிலும் மணலாற்றிலும் செத்துப்போக
நான் மட்டும்
ஒரு வலிய சாவுக்காகக் காத்திருக்கிறேன்.

-1991.

......
இந்தக் கவிதையின் பின்னணியில் நண்பர்களாகவும் உறவினர்களாகவுமிருந்த ஏராளம் இளைஞர்கள் , மிகவும் நல்லவர்கள் , ஒவ்வொரு உயிரையும் நேசித்த பலரையும் இந்த நிலத்தின் எல்லோரையும் போல சிறிய வயதில் சந்தித்திருக்கிறேன். அவர்களின் பிரிவும் இழப்பும் தான் இந்த யுத்தத்தின் கொடிய பக்கமாயிருக்கிறது.

இந்த வசந்தம்

அன்றைக்கு மாலை
நானும் ரூபனும் கடலுக்குச் சென்றோம்
அவன் வீடுக்குப் போகும்
குறுக்கு வழியில் அவனைச் சந்தித்தேன்
யுத்தம் நடந்துகொண்டிருக்கிற காலம்

வீதியை விட்டு மணலுக்குள் புகுந்து
எருக்கலையருகில்
கடலைப்பார்த்திருந்தோம்
கனத்த உப்பங்காற்று வீசுகிறது
என் முகமெல்லாம்
நெஞ்சுரப்பான மசமசப்பூட்டுகிறது.

சோதினை நடக்கவில்லை
ஒரு பருவகாலம் முழுவதுமே Mood குழம்பிக்கொண்டிருக்கிறது
கன நண்பர்கள் இயக்கத்துக்குப் போய்விட்டார்கள்
அவர்களின் போகுதலின் முன்
இந்தக் கடற்கரையில் இப்போ நாங்கள் முகருகின்ற சோகத்தை
முகர்ந்துகொண்டுதான் போனார்கள்
பரந்த கடலில் நமது சோகம் ஒரு அலையேனும் ஆகாவிட்டாலும்
இப்படிச் சொல்லச் சிரமமாயிருந்தாலும்
'யுத்தத்தில் நாங்கள் வெல்லத்தானே வேணும்'

மனச்சாட்சி உறுத்துகிறது
அலைமுறியும் கடற்காற்றில்
பருத்த மணல்கள் கால்களில் விழுகிறது.

- 1991

.....

செவ்விந்தியனின் கவிதைகளில் இன்னுமொரு முக்கிய அம்சம் அதன் சொற்களின் உள்ளூர்த்தனம். மேலும் நேரடியான நடைமுறை வாழ்க்கையில் உள்ள சொற்களை கையாள்தல்,

"காலில் வியர்த்தது
ரௌசரோடு நடக்கக் கஷ்டமாய் இருந்தது
கடற்கரை ஒழுங்கைக்குள் தள்ளாடித் தள்ளாடி
அறைக்குள் போனேன்"  

இன்னும் பல சொற்களை பெரும்பாலான  கவிதைகளுக்குள்ளும் காணலாம்.

*

எனது  டியர் கவிஞனைப் பற்றி எவ்வளவும் சொல்லலாம் , ஒரு கால கட்டத்தின் குரல் அவன். நெருப்பெரிந்த காலங்களில் அதன் வெப்பக் காற்றில்  அலைந்த இக்கவிஞனின் "காடு " என்ற கவிதை உக்கிரமான  ஒன்று. இன்றும் அந்தக் காடுகளுக்கு நான் செல்லும் போது இந்த வரிகளைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொள்வேன் ,

"பூனை அழுகிறமாதிரி
மயில்கள் அகவுகின்றன."

முழுக்கவிதையும் ,

...
காடு

நடுக்காட்டுக் கோவிலிலிருந்து
பறை அழைத்தது
ஆடுகுத்துகிற மீசைக்காரக் கறுவல்
தன்முகம் சோகத்தோடு நீண்டு அடிக்கிறான்
பறை ஓய்வுக்குப் பின்னாலும்
நெடுநேரம் அவன் முகத்திலிருந்து
கடந்தகாலம் துயரத்துடன் இசைந்தது
இனி அனைத்தையும் கழுவிக் கொண்டுபோக
சத்தமில்லாத மழை
நீண்ட நேரம் அமர்ந்தமர்ந்து தூறியது
மருதமரங்கள், காயா, வஞ்சூரன், பனிச்சமரங்கள், கொய்யா
இவற்றில் வெண்மை படிந்தது
பழங்காலக் காவில் மணியும்
சனங்களுக்காகவும் கனகாலம் இருந்த தனிமைக்காகவும்
சிணுங்கியது

தோளிலிருந்து பறையை இறக்கி
கொஞ்சம் புக்கைக்காக பறையன் இருந்துவிட்டு
பறையை எடுத்துக்கொண்டு குனிந்து போனான்
கிறவல் பாதையில்
மண்ணில் புதைந்து வந்தேன் நான்
இக்கங்குல்காலத்தில்
ஈனஸ்வரத்தில் பூனை அழுகிறமாதிரி
மயில்கள் அகவுகின்றன.

- 1991

இந்தக் கவிதையோடு ,  செவ்விந்தியனின் தொகுப்பின் இணைப்பை கீழே இணைத்துள்ளேன் நீங்களும் வாசித்துப் பார்க்கலாம் .

கிரிஷாந்.

http://www.noolaham.net/project/02/105/105.htm

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக